முகப்பு

Sunday, 27 November 2011

மூன்று தகவல்கள் ...

வணக்கம்..!!

டிஸ்கி- எல்லாரும் டிஸ்கியை கடைசியாக தான் எழுதுவாங்க. ஆனா நான் பதிவு எழுதணும் எண்டு எழுதல, என்ர மாப்பிள எழுதுற சங்கிலியன் தொடர் பிடிச்சிருக்கு.. இது கட்டாயம் அதிகமான பேரை சென்றடையவேண்டும் என்ற காரணத்தால அது பற்றி என் வலைத்தளத்திலே அறிமுகத்துடன்; என்ர மூஞ்சி புத்தகத்தில் போட்ட இரு தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த தொடர் உண்மையிலே நாம தெரிஞ்சுக்க வேண்டியது. யாரும் தவறவிடாதேங்கோ. 


நான் பார்த்தவரை இலங்கை இந்தியா போன்ற கீழத்தேய நாடுகளில்தான் பெண் அதிபர்கள் அதிகமாக இருக்கிறார்கள் அல்லது இருந்திருக்கிறார்கள்...!!??


இன்னும் குறிப்பாய் வல்லரசுகள் என்னும் வீட்டோ அதிகார நாடுகளில் அதிபர்கள் அனைவருமே ஆண்கள்.. பிரான்சில் அதிபர் தேர்தலில் (அங்கேலா மேர்கர் அம்மையார் போன்றோர் விதி விலக்கு..).போட்டியிடும் பிரதான இரண்டு வேட்பாளர்களும் ஆண்களே...! ஆகையால் இன்னும் ஐந்து வருடம் இங்கும் பெண் அதிபர்கள் வரமாட்டார்கள்...!!!

ஐயா நான் காட்டானுங்க.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..?

 மேலை நாட்டுக்காரர்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறார்கள் என்றாலும் அதி முக்கிய பதவிகள் ஆண்களுக்கே ஒதுக்குகிறார்கள்..!! 

ஆனால் கீழத்தேய நாட்டில் பெண்களுக்கு சம உரிமை இல்லை.. ஆனால் பெரிய பதவிகளில் பெண்கள் அலங்கரிக்கிறார்கள். உலகத்தின் முதல் பிரதமர் சிறீமாவோ தொடக்கம் முதலாவது இஸ்லாமிய பிரதமர் பெனாஷிர் பூட்டோ வரை பட்டியல் நீளம்

ஐயா..! 
எனக்கு ஒரு சந்தேகம்.. மேலைத்தேய நாடுகளின் வளர்ச்சிக்கு பெண்கள் அதிபர்களாக இல்லாததுதான் காரணமா


டிஸ்கி:- நான் பெண்களின் எதிரி இல்லைங்கோ!!!))) 

-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊரில் ஆச்சி அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை தை பிறந்தால் வழி பிறக்கும் என்று.??!!

இதை நான் பல இடங்களில் வெவ்வேறு அர்த்தத்தில் பேசுவதை கேள்விப்பட்டிருக்கிறேன்..

1 :-தை பிறந்தால் விவசாயிகள் அறுவடை முடித்து தானியங்களை விற்பனை செய்து வரும் வருமானத்தில் சந்தோஷமாய் நற் காரியங்கள் செய்வார்கள்.(திருமணங்கள் கூடுதலாக தை மாதத்தில்தான் செய்கிறார்கள்..!!! அப்போதுதான் ஆடி மாதத்தில் மாசமான பெண்னை பிரித்து வைக்கலாம்.. ஹி ஹி ஹி!!)

2:-இப்படியும் சொல்கிறார்கள் அந்த காலத்தில ஒவ்வோர் ஊருக்கும் இடையில் இப்ப இருப்பது போல் சாலை வசதி இல்லை.. விவசாய நிலங்களாலும் நீராலும் சூழப்பட்ட கிராமத்தில் மாரி காலத்தில் பாதை அடைபட்டு போகின்றது. 

தை மாதத்தில் நீரும் வற்றி அறுவடையும் முடியும்போது பாதை அதாவது வழி தெரிகின்றது.. ஆகையால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் சொல்கிறார்கள்...!!!!!!))) 

எது சரி? இக்காலத்திலும் இந்த பழமொழி எமக்கு சரி வருமா..? தை பிறந்தால் இப்போ இருக்கும் விவசாயிகளும் முன்னைப்போல் சந்தோஷமாய் இருக்கிறார்களா..? 

Saturday, 5 November 2011

சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?

வணக்கமுங்க!
இப்ப கொஞ்ச நாளா நான் என்ர வீட்டுக்கு பின்னால இருக்கிற  'பொட்டால' தான் வீட்டுக்குள்ள போய்வாறன். ஏன்னா படலையில ஒருத்தன் மண்ணெண்னை டின்னோட நிண்டுகொண்டு என்னை வெருட்டுறான்; என்ர பொட்டைய தனக்கு கட்டிவைன்னு.  அட இவன் தீ குளிக்கப்போறேன்னு சொன்னானோ இல்ல 'என்ர மாமனோட' சேர்ந்து டீ குடிக்கப்போறேன்னு சொன்னானோன்னு ஒரு சந்தேகமுங்கோ!

அட! இவண்ட வெருட்டுக்கு நான் பயந்து என்ர பொட்டைய கட்டி வைச்சேன்னா எனக்கு உலகம் பூரா இருக்கிற மருமோன்களோட பிரச்சனையா போகும். இஞ்ச பக்கத்தில இருக்கிற அப்பாவி மூஞ்சிக்காரனுக்கே இப்பிடி எண்ணம் வருகுதென்னா மற்றவங்களை நினைச்சுப்பார்த்தா நடுக்கம்தான் வருகுது..

ஆனா எனக்கு ஒரு விஷயம் இன்னும் விளங்கலேங்கோ; யாற்ற கண்ணுலேயும் படாம பொத்தி பொத்தி வளர்த்த என்ர பொட்டைய இவனுங்க என்னன்னு கண்டுபிடிக்கிறாங்கண்னு எனக்கு விளங்கல.. அதுவும் சரிதானே ஊர் உலகத்தில இல்லாத அழகி என்ர பொட்ட, அப்படிப்பட்டவள இவனுங்க கண்ணுபடாம நான் வளர்க்கிறதுக்கு படுற பாடு இருக்கே..! அப்பப்பா.. சொல்லி மாளாது..!!
                                                      (என்ர பொண்ணு அழகுக்கு இவ எம்மாத்திரமுங்க! )
நானும் என்னடா எல்லாரும் வேலாயுதம் படம்பார்க்க இப்படி அடிச்சுப்பிடிச்சு ஓடுறாங்களேன்னு பார்த்தன். அட! அவங்க அங்க ஹன்சிகான்னு ஒருத்திக்காகதான் இந்த ஓட்டம் ஓடுறாங்கன்னு பின்னதான் தெரிஞ்சுது. அவங்களுக்கே இப்படி ஓடுற என்ர மருமோன்கள், அவள விட நூறு மடங்கு வடிவான என்ர பொட்டைய கண்டுட்டுத்தான் மாமா மாமான்னு இப்ப என்பின்னாடி நிக்கிறாங்க...

எப்பிடியோ என்ர கிளிய வளர்த்து இந்த பூனைகள்ல ஒருத்தனிட்டதான் கொடுக்க வேண்டும். இதில எந்த பூனை நல்ல பூனைன்னு என்னால கண்டுபிடிக்க முடியாம இருக்குங்கோ! பிரான்சில இருக்கிற என்ர மண்ணெண்ணை டின் மருமோனுக்கு கட்டி வைக்கலாம்தான்; அப்படி செய்தா என்ன இந்த வெருட்டு வெருட்டினவன் என்னை கண்டா பெட்டிப்பாம்பா இருக்கிறதுக்கு நான் என்ர பொட்டைய கொண்டு "ஆவன"செய்யலாம்.  ஆனா, காட்டான் நாக்கு தவறினாலும் வாக்கு தவறமாட்டான்னு ஊருக்குள்ள ஒரு பேச்சு இருக்குங்கோ. ஒருத்தனுக்கு வாக்க கொடுத்திட்டு மற்றவங்கள நான் ஏமாத்த விரும்பல..!

அதுதான், நேற்று இதே யோசனையா இருந்ததில நித்திரை வரல்ல. அப்பத்தான் என்ர மணியண்ண டெலிபோன் எடுத்து "காட்டான் நீ உன்ர கிளிக்குஞ்ச பத்தியோ, உந்த மருமோன்கள பத்தியோ யோசிச்சு மண்டைய உடைக்காத. கொஞ்சம் "பூசிமெழுகி" நித்திரைய கொள்ளடா நாளைக்கு நான் வந்து கதைக்கிறேன்" எண்டார்.. ஹி ஹி ஹி அதுதான் நேற்று கொஞ்சம் கூடுதலாவே "பூசீ"ற்றன் போல! என்ர அப்புச்சி கனவில, சிவலயன கையில பிடிச்சுக்கொண்டு நிக்கிறார். "டேய் காட்டான்! இதுக்கேண்டா தலைய போட்டு உடைக்கிறாய்? எங்கட குடும்பத்துக்கும் உன்ர பொட்டைக்கும் தோதான மாப்பிளைய சிவலயன வைச்சு பிடியடா! இல்லாட்டி வெத்தில போடவைச்சு பிடியடா" எண்டுட்டு போட்டார்.. ஹி ஹி அதொன்னுமில்லைங்கோ யார் என்ர சிவலயன அடக்குறாங்களோ அவனுக்குதான் என்ர பொட்ட.. அடுத்து வெத்தில வைச்சு பிடிக்கிறது ஒண்டும் சிக்கல் இல்லிங்கோ! அந்த முறை என்ர அப்புச்சி அடிக்கடி செய்யுறதுதாங்கோ.
                                                                             (மாப்பிளைங்களா ரெடியா)
யாராவது அப்புச்சியிட்ட கடன் வாங்க வந்தால் என்ர அப்புச்சி முதல்ல அவனுக்கு வெத்தில குடுத்துட்டுதான் பேச்ச ஆரம்பிப்பார். வெத்திலய வாங்கினவன் முழு வெத்திலையையும் வாங்கி போட்டான்னா அப்புச்சி காசு கொடுக்கமாட்டார். ஏன்னா, அவனிட்ட கொடுத்த காசு திரும்பி வராதாம்..! கொஞ்சமா எடுத்து போடுறவனுக்குதான் கடன் கொடுப்பார்; அவனுக்குதான் காசின் அருமை தெரியுமாம்.. அதைப்போல யாராவது உழவுக்கு சிவலயன கேட்டு வந்தா முதல்ல 'அடியே சின்னபொட்ட(ஹி ஹி ஆச்சி பேரு) ராசையனுக்கு வெத்தில பெட்டிய கொடடி'ன்னுவார். வந்தவர் வெத்தில போடலைன்னு வைச்சுக்கோங்க அவருக்கு கட்டாயம் சிவலயன கொடுக்கமாட்டார்! ஏன்னா வெத்தில போடுறவன் மாட்ட உழுதுகொண்டு இருக்கேக்க  இடையில இளைப்பாற விட்டுட்டு வரப்பில வேலை செய்யுற பெண்டுகளோட வெத்திலைய போட்டு கொஞ்சம் "அறப்படிச்சிட்டு" தானுங்க திரும்பி வருவான்! அந்த இடைப்பட்ட நேரத்தில மாடுகளும் கொஞ்சம் ஓய்வு எடுத்திடும். இப்ப வேலையில இருக்கிற பொடியங்க 'வெள்ளசுருட்டு' பத்த வெளியில போறாங்களே அதப்போல.. 

 என்ர சிவலயன அடக்கிறவனுக்குத்தான் நான் என்ர பொட்டைய கட்டிக்குடுக்குறதுன்னு முடிவெடுத்தா போதாது; இஞ்ச இருக்கிற நகர சபையில நான் அனுமதி வாங்கோனுமாம்!  நம்ம நாட்டிலன்னா மேசைக்கு கீழால தள்ளியாவது அனுமதி வாங்கலாம். இவனுங்க தானும் செய்யான், மற்றவங்களையும் விடான்னு நிக்கிறவங்க! அதுதான்  நேரடியாவே போய் கேட்டேன் அவங்களிட்ட..  'ரெம்ப சந்தோஷமா வைச்சுக்கோங்க, இஞ்ச பிரெஞ்சுக்காரங்களுக்கும் அது ஒரு புது அனுபவமா இருக்குமென்னாங்க. ஆனா அதுக்கு எல்லா ஒழுங்கும் செய்து அனுமதி வாங்க உன்ர மருமோன்களோட படத்தோட சிவலயனின் படத்தையும் வைச்சு அனுப்புங்கோ நான் அனுமதி வாங்கித்தாரன்'னு அந்த பிள்ளை சொன்னத நம்பி வீட்டுக்கு வந்தா, ரெண்டு நாள் கழிச்சு அந்த பிள்ள டெலிபோனில மிசு(mr) காட்டான் ஒருக்கா நேரில வாங்கோ கதைப்பமெண்டாள்.  அங்க போனா என்ர தலையில இடிய போடுறாள்; மிசு காட்டான் உன்ர சிவலயனைப்பற்றி எங்களுக்கு ஒண்டும் ஆட்சேபனையில்ல. ஆனா, நீங்க தந்த உங்க மருமோன்களோட படத்த பாத்திட்டு அனுமதி தர முடியாதுன்னுட்டாங்களாம்!  ஏன்னா இதுவரை எங்களுக்கு மிருக வதைச்சட்டத்ததான் தெரியும். உன்ர சிவலயனால எங்க நாட்டில மிருகங்களால மனித வதைச்சட்டம் போடனும்போலன்னு சொல்லுறாள். பின்ன நான் குடுத்த போட்டோக்களில எல்லாம் இப்படி நோஞ்சாங்களா நின்னா யார்தான் அனுமதி தருவாங்க...!


அட ஏற்கனவே இதையெல்லாம் கேள்விப்பட்டு கதிகலங்கிப்போய் இருந்த என்ர மருமோன்களுக்கு ரெம்ப சந்தோஷமாய் போச்சு; என்ர சிவலயனிட்ட இருந்து தப்பீடோமெண்டு..

அட சிவலயனதான் விட்டாலும் நான் அடுத்த பரீச்சைக்கு என்ர மருமோன்களுக்கு அழைப்பு வைச்சேன்; அதுதாங்க வெத்திலய வைச்சு அவங்கள்ல யார் என்ர பொட்டைக்கு நல்ல மாப்பிள்ளைன்னு கண்டுபிடிக்கதான். அதுக்குதான் நான் இப்ப உங்களையெல்லாம் வரச்சென்னனான். ஹி ஹி ஹி அட இதிலேயும் சில கில்லாடி மருமோன்கள் தாங்க வெத்திலையே போடுறதில்லைன்னு சொல்லி எஸ்கேப்பாகுறானுங்கோ. அட எங்கேயாவது "பூசி"போட்டு வீட்ட போகேக்க மட்டும் மணம் தெரியாம இருக்க வெத்திலைய சப்பிக்கொண்டு போவானுங்க. ஆனா போட்டிக்குமட்டும் "மாமா நான் ரெம்ப நல்லவன் எந்த கெட்ட பழக்கமும் இல்லைன்னு" ரீலு விடுறானுங்கோ. அட உந்த கதையெல்லாம் என்னட்ட சரிப்பட்டு வராது, நீங்க வந்து வெத்தலைய மடிச்சு எனக்கு எடுத்து தாங்கோ வந்திருக்கிற சபையோரே பாத்துக்கீத்து உங்கள்ள யாரு சிறந்த மருமோன்னு சொல்லட்டும்...

அட அது என்ன ஒரு வெத்திலைய மடிச்சு எடுத்தத வைச்சு என்னன்னு நீ மாப்பிளைய பிடிப்பாய்ன்னு கேட்கிறீங்களா..? நம்ம பண்டைய தமிழர்களின் வாழ்க்கையில வெத்தில ஒரு முக்கியமான பொருளைய்யா! யாருமே வெத்தில பெட்டிய இரவல் கொடுக்கமாட்டாங்க! அது லஷ்சுமியாம் அத்தோட பிறப்பில இருந்து இறப்பு வரை நடக்கிற எல்லா நல்லதோ கெட்டதோ எந்த  காரியத்துக்கும் தமிழண்ட வாழ்க்கையில வெத்தில இருக்குது. அந்த காலத்தில ஊரில யாருடைய வீட்டிலயாவது சூரிய அஸ்த்தமனத்துக்கு பிறகு வெத்தில கேட்டா உங்கள அடிக்க வருகிற மாதிரி பாப்பாங்க. அப்படியே வெத்திலைய தந்தாலும் அத கிள்ளிப்போட்டுத்தான் தருவாங்க. அப்படி செய்யாட்டி லஷ்சுமி வீட்ட விட்டு போயிடுவாள்ன்னு நம்பினாங்க. அப்படிப்பட்ட வெத்திலய நம்ம முன்னோர்கள் மற்றவர்களின் குண நடைகளை அறிவதற்கும் பயன்படுத்தி இருக்காங்க. ஒருத்தன் பொண்ணு பார்க்க வரும்போது பொண்ணோட சொந்தக்காரங்கெல்லாம் சேர்ந்து மாப்பிள முன்னால உக்காந்துடுவாங்க. மாப்பிள எப்பிடி வெத்தலைய தொட்டார்? எப்படி அதை இரண்டாக பிரித்தார்? எப்படி பாக்கை வெட்டினார்? எவ்வளவு சுன்னாம்பை சேர்த்தார்? அதை எப்படி வாய்க்குள் கொண்டுபோனார்ன்னு எல்லாத்தையும் அவதானிப்பாங்கோ. ஒவ்வொரு செயலின் பின்னாலு அந்த மனிதனின் குண நலன்கள்'ன்னு எல்லாத்தையும் அறியலாமாம்..!!??
                                                               (இது தான்என்ர அப்புச்சின்ர வெத்தில தட்டு)
உண்மைய சொன்னா எனக்கு என்ர பக்கத்தில இருக்கிற மருமோனுக்கு உதெல்லாம் பார்க்காம கட்டி குடுக்க ஆசைதான். அப்பிடி கட்டி குடுத்து வீட்டோட மாப்பிளையா வைச்சு அவரை ஒரு பெட்டிப்பாம்பாக விருப்பம்தான்! ஆனா மற்ற மருமோன்கள் என்னோட சண்டைக்கு வாராங்க. 'அதெப்படி மாமா உனக்கு அவந்தான் முக்கியமா போச்சோ'ன்னு! அதுதாங்க நான் உங்களையெல்லாம் வரவழைச்சிருக்கேனுன்ங்கோ. என்ர மருமோன்கள் பயங்கர கில்லாடிங்கோ; அவங்களுக்கு இடம் கொடுத்தீங்க ஒட்டகத்துக்கு இடம்கொடுத்ததைப்போல போயிடும். நீங்கதான் இவங்கள்ள யாரு என்ர பொட்டைக்கு தோதான மாப்பிளைன்னு பார்த்து சொல்லோனும்! உங்கள நம்பி அந்த பொல்லாத பொடியங்கள கூப்பிடுறன் சரிதானேங்கோ!!

டிஸ்கி :-இந்த  டெம்லேட் அமைக்க உதவி செய்தவர் நிகழ்வுகள் வலைத்தளத்தின்  முதலாளி கந்தசாமிக்கு நன்றி. (இதை அமைத்து தந்ததுக்காக போட்டியில் விசேட சலுகைகள் தரப்பட மாட்டாது என்பதை அறியத்தருகிறேன்)

Tuesday, 23 August 2011

நம்மவர்கள்......

வணக்கமுங்கோ............

இப்பிடித்தாங்கோ ஒரு நாள் ஊரில என்ர சிவலயயோட வீட்ட போகேக்க அங்க அப்புச்சி தலைமையில அவசர அமைச்சரவை கூட்டம் நடந்துகிட்டிருந்தது.. அதில அடிக்கடி காட்டான்னு என்ர பேர சொல்லேக்க எனக்கு விளங்கீற்று இண்டைக்கு என்னைப்பற்றித்தான் முக்கிய மந்திராலோசனை நடக்குதெண்டு..

இதில வேற எனக்கு உள்ளூர ஒரு பயம் விளம்பரத்துக்கு எழுதி போட்ட மாதிரி எழுதி எல்லா பொம்புளபிள்ளைகளின் சைக்கிளிள் போட்டு வைச்ச கடிதங்கள யாராவது கொண்டு வந்து கொடுத்திட்டாங்களோன்னு...

அப்புறமா அப்புச்சி கூப்பிட்டார்.. என்னன்னு போனா என்னடா காட்டான் உன்ர சிவவல கந்தையண்ட காட்டுக்குள்ள மேய்சிட்டாம் நீ அப்ப என்னத்த புடுங்கிக்கொண்டு இருந்தான்னார்.. இப்பிடித்தாங்க என்ர சிவலயன் எப்பவும் என்னை மாட்டி விட்டுடுவான்..

இதில வேற காலையில கந்தையர் காட்டுப்பக்கமாதான் சிவலய ஓட்டிக்கொண்டு போகோனும் அவன மேயவிட.... நானும் என்ர யிம்மியும் சிவலய பிடிச்சுக்கொண்டு  கந்தயர் காட்டுப்பக்கம் போனா வடலீக்க செம்போட ஒதுங்கிற கந்தையர் முடிச்சது பாதி முடிக்காதது பாதின்னு ஓடிவருவார் தன்ர காட்ட மேயவிடுடுடவானோன்னு ஒரு பயத்தோட..

நாங்க ஒன்னும் சிவலய சும்மா கூட்டிற்று போறதில்லைங்கோ பழைய நீத்து பெட்டிய(புட்டு அவிக்க பனை ஓலையால் செய்த ஒரு கூம்பு வடிவிலான பாத்திரம்...!!??)அவன் வாயில கட்டித்தான் கொண்டுபோவோம் அவன் அதையும் சாப்பிட்டுவிட்டு கந்தையர் தோட்டத்திலேயும் கொஞ்சம் மேஞ்சிட்டான் அதுதான் இப்ப நடந்த அவசர கூட்டம்...

கந்தையர் வந்து கூச்சல் போட்டது அப்புச்சிக்கு கொஞ்சம் சூடாப்போச்சு சிவலயனயே மேய்க்க தெரியாத உனக்கு எதிர்கால வாழ்க்கை இஞ்ச சிரமம் உன்ன வெளிநாட்ட அனுப்ப போறம்ன்னு முடிவெடுத்திட்டோம்ன்னார்.. அப்புச்சியிட்ட இன்னோரு சான்ஸ் கேட்டேன்.. சிவலயனபோல பத்து பேர மேய்ப்பேன்னு உந்த கதையெல்லாம் வேண்டாம் இப்ப நான் சொல்லுறத செய்பாப்போம்ன்னு ஊற வைச்ச எள்ளு புண்ணாக்க நிறைய தண்ணி விட்டு தந்தார் இத உன்ர சிவலயன் முழுக்க குடிச்சா மேற்கொண்டு பேசுவோம்ன்னார்..

நானும் சிவலயனிட்ட அப்புச்சி தந்த புண்ணாக்க கொடுத்தேங்க.. அண்டைக்கு எனக்கு அடிச்சாங்க சிவலயன் ஆப்பு.. ஆமாங்க மூக்க புண்ணாக்கு தண்ணியில விட்டு சுழியோடி புண்ணாக்க மட்டும் சாப்பிட்டுட்டு தண்ணிய விட்டுட்டான்யா என்ர சிவலயன்....

அதுக்கு பிறகு அப்புச்சியிண்ட பேச்ச மீற முடியாமதாங்க நான் வெளிநாடு வந்தேனுங்க... என்ன அனுப்பேக்க மணியண்ணயிட்டதான் அனுப்போனும்ன்னு பிரான்சுக்கு அனுப்பி வச்சாங்க... பிரான்ஸ் வந்த முதல் நாள் மணியண்ண கேட்ட கேள்வி.. என்னடா காட்டான் உன்ர கோத்தைக்கும் கொப்பருக்கும் (அம்மா,அப்பா) அறிவு இருக்கோன்னு..

ஏன்னா நான் சின்ன புள்ளையாம் தனியா இப்பிடி அனுப்பக்கூடாதாம்.. அப்ப எனக்கு ஆகுலனை விட அரும்பு மீசை கூட இருந்திச்சு... அதவிட 18வயசு வேற... நானும் வந்தபோது இஞ்ச நாந்தான் வயதில குறைஞ்சவன்...

இப்ப நானும் பாக்கிறேன் 12,13 வயசி பொடியள தனியா அனுப்புறாங்க... அட மாடு மேச்ச காட்டானே இஞ்ச வரேக்க அவங்க வரக்கூடாதோன்னு நீங்க கேப்பீங்க.. யாரையா வரவேண்டாம்ன்னு சொல்லுறது ஆனா ஒண்ட மட்டும் யோசிச்சு பாருங்கோ இப்பிடி வருகிற பொடியங்கள அவங்க சொந்தக்காரங்க தன்ர பிள்ளைபோல நடத்துவார்களா..!!? அடுத்து வருகிற பொடியங்க கொஞ்சம் குழப்படியானவங்கன்னா இஞ்ச கண்டிச்சு வளர்க்க முடியுமோ..!!??

சில தாய்மார்கள் இப்பிடி வருகிற பொடியங்கள வீட்ட வித்து காணியவித்து அனுப்புறாங்க அங்க காச கொடுத்தவன் இறுக்கேக்க இவங்க இஞ்ச இருக்கிற சின்ன பொடியன இறுக்குவாங்க...!!!? அவங்க என்ன செய்வாங்க..? தொல்லை தாங்க முடியாம வயச கூட்டி விசாவ பதிவாங்க... விசாவும் கிடைச்சு வேலை செய்த முதல் மாச சம்பளத்தையும் பார்தா அவங்க என்ன செய்வாங்க.. அதுவும் எதையுமே செய்யும் சுதந்திரமுள்ள ஒரு நாட்டில..!!!??

தவறானபாதையில சிறுவர்கள போக விட்டுட்டு அங்க இருந்து குய்யோ முறையோன்னு கத்துறத்தில ஒரு பிரயோசனமும் இல்லீங்க.. ஒரு சிறுவன் தன்ர தாய் தகப்பனோட இருக்கிறதுக்கும் சொந்தக்காரன்னு சொல்லுறவங்களோட இருக்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்..

ஒரு சிறுவனை அவன் வயதில் அனுபவிக்க வேண்டிய சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்கவிடாது.. குருவி தலையில் பணங்காய வைக்கும் எங்கட ஆட்கள் சொல்லக்கூடாது எங்கட பொடியங்கள் வன்முறைப்பாதையில் செல்கிறாங்கன்னு... அதை சொல்ல இப்பிடியான சிறுவர்களை அனுப்பும் மனிதப்பேய்களுக்கு உரிமையில்லை..??

எனக்கும் தெரியும் இப்பிடி வரும் சிறுவர்கள் மட்டும்தான் இப்பிடி செய்கிறார்களா..? இங்கு பெற்றோர்கள் பிள்ளைகளை கவனிக்காது வேலை வேலைன்னு ஓடுபவர்களின் பிள்ளைகளில் சிலரும்  இப்படி இருக்கிறார்கள்தான் அதை நான் மறுக்கவில்லைத்தான்... ஆனால் இவர்களை கண்டிச்சு திருத்தக்கூடிய சூழலலில் இங்கு பெற்றோர் இருப்பதால் திருந்துவதற்கு ஓரளவு சாத்தியம் இருக்கின்றது... ஆனால் பெற்றோர்களே இல்லாமல் தனித்து இருக்கும் சிறுவர்களை யார்  மாற்றுப்பாதையில்அழைத்துச்செல்வது..?

இதெல்லாம் காட்டான் சொன்னா எடுபடப்போறதில்லைங்கோ... ஆனா இத எழுத காரணம் என்ன பாதிச்ச ஒரு சம்பவம்தாங்கோ..என்ர மணியண்ண எப்பிடின்னா ஊரில சொல்லுவாங்களே பக்கத்து இலைக்கு பருப்பு வேணுன்னு(தனக்கு இலையில் பருப்பு இல்லைன்னா சாப்பாடு பரிமாறுபவரை அழைத்து தம்பி பக்கத்து இலைக்கு பருப்பு இல்லைன்னு சொல்லுவாங்க அவரும் பருப்புச் சட்டியோடு வரும்போது  வந்தது வந்திட்டீங்க எனக்கும் போடுங்க என்பார்கள்..!!??) அதபோல என்னடா காட்டான் ஒருகிழமைதான் லீவெண்டு பரிசில நிக்கிறாய் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு லண்டன் பக்கம் போகலாமேன்னார்... நானும் பார்தன் இவருக்கு ஒரு சொந்தகாரன் லண்டனில இருக்கிறார்தானே ஓசியில ஓட்டுமடம் போகலாம்ன்னு...!!?  லீவ பிள்ளைகளோட இன்பச்சுற்றிலா சுத்தி வருவோமெண்டு மாட்டுவண்டிய எடுத்தா ஒரு உரவாக்கோட மணியண்ண வந்து நிக்கிறார்.. அட காட்டான் சின்னவங்களோட போகேக்க நீ கஷ்டப்படுவாய் அதுதான் நானும் உன்கூட வர்ரேன்னுட்டார்...!!??

இனி என்ன செய்ய முடியும் மாட்டு வண்டியில மணியண்ணையையும் கூட்டிக்கொண்டு லண்டனுக்கு போனா அங்க அவங்கள் மணியண்ணைக்கு நெரிங்கிய சொந்தமாம்.. மணியண்ணையின் மனிசியின் சகோதரியின் கணவரின் தாயின் அண்ணனின்.......... வேண்டாம் விட்டுடுறன் இப்பிடிபட்ட நெரிங்கிய சொந்தக்காரங்களின் வீட்டில் நான் கண்ட காட்சிதான்யா என்ர மனச குடைஞ்சு இந்த பதிவ எழுத தூண்டியது....!!

அந்த வீட்டில் ஒரு நாப்பது நாப்பத்தைந்து வயசு மதிக்கக்கூடியவர் ஒரு பத்து பதினொன்னு வயசு மதிக்கதக்க தன்ர மகளோடு வந்து இருக்கிறார்.. நமக்குதானே பேச்சுக்கு ஒரு ஆள்தேவை எல்லோரும் வேலை வேலைன்னு ஓடுறாங்க இவர் வந்து ஒரு மாசம் பேச்சுக்கு நடுவே நான் கேட்டேன் என்னங்க உங்க மனிசி இல்லையோன்னு அவரு சொல்லுறார்.. இஸ்பொன்சர் பண்ணி கூப்பிடுவம்ன்னு...!!?? எப்ப ..!!?? முதல்ல இவருக்கு விசா கிடைக்கோனும்.. அதுக்கு பிறகுதானே ஸ்பொன்சரப்பற்றி கதைக்கலாம்.. இஞ்ச எவ்வளவு பேருக்கு பத்து பதினைஞ்சு வருசமா விசா இல்லாம இருக்கிறாங்க...!!?

என்ர மனச குடையிற கேள்வி என்னான்னா பூப்படையும் வயசில இருக்கிற தாயின் ஆலோசனைகள் தேவைப்படுகிற ஒரு சிறுமியை இங்கு தாயில்லாமல் அழைத்து வரவேண்டிய தேவை என்னையா.. ஏன் இவர் மட்டும் தனியாய் வந்து மற்றவர்களைபோல் விசா கிடைத்தவுடன் குடும்பத்தையே அழைத்திருக்கலாமே..!? அந்த சிறுமி தான் நாட்டுக்கு அம்மாவிடம் செல்லப்போகிறேன் என்று அழும் காட்சி எனது மனச இன்னும் குடையுது..!!

நாளைக்கு நல்லதபோல ஒரு கெட்டது நடந்தா யாரையா பதில் சொல்லுறது..!? இந்த பச்ச புள்ளைய அனுப்பியதாய் ஒருகணம் நினைச்சுப்பாத்தாவா..
இதன் பாதிப்புக்களை... ?? வெளிநாட்டு மோகத்திற்கு ஒரு அளவே இல்லையாப்பா..??

எனக்கு இந்த முட்டாள் பெற்றோறை இப்பிடி எழுதி திட்டுவதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதுப்பா..நாங்க எங்க போறோமையா....!!??

















நல்லா பாருங்கையா மணியண்ண இதுக்குள்ள தான்யா இருக்கிறார் வண்டிய கப்பலுக்கதானாம் ஏத்தோனும் லண்டன் போறத்துக்கு... இததான் பெரியவங்க சொல்லுவா ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறுமுன்னு....